பிறந்த குழந்தைக்கு சரியாக தாய்பால் சுரக்கவில்லை?

பிறந்த குழந்தைக்கு சரியாக தாய்பால் சுரக்கவில்லை அதனால் புட்டி பால் கொடுத்தேன்.. பசும்பால் / லேக்டோஜென் கொடுத்தேன் என்று தாய்மார்கள் கூறும் போது ரத்தக்கண்ணீர் தான் வரும்

ஏனெனில் உண்மையில் தாய்பால் சுரக்காமல் இருப்பதில்லை. அது சரியாகத்தான் சுரக்கிறது.

ஒன்று நமக்கு அந்த பாலை சரியாக புகட்ட தெரியவில்லை இரண்டு குழந்தைக்கு சரியாக பருக முடியவில்லை ( காய்ச்சல்/ கிருமி தொற்று/ அன்னப்பிளவு/ உதட்டுப்பிளவு போன்ற பிரச்சனைகள்) இந்த இரு காரணங்கள் தான் தாய்பால் சரியாக கிடைக்காமல் போவதற்கு காரணம்

முதல் காரணமான தாய்க்கு சரியாக தாய்பாலை புகட்டத் தெரியவில்லை என்பதே பெரும்பான்மை காரணம் .

கிட்டதட்ட 99 சதவிகித தாய்பால் வராத தாய்மார்கள் சரியாக முறையுடன் தாய்பால் கொடுப்பதில்லை .இதுவே உண்மை . ஒரு கன்று ஈன்ற பசு மாட்டுக்கு தாய்பால் சுரக்காமல் போய் பார்ப்பது மிக மிக அரிது. ஏன் அஃறிணை உயிர்கள் பலவற்றிற்கும் தன் குட்டிக்கு பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொடுப்பதால் .. அவைகளுக்கு பால் பிரச்சனை வருவதில்லை. அதன் குட்டிகளுக்கு லேக்டோஜெனும் தேவைப்படுவதில்லை

சரியான முறைப்படி எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் ? தாய்பால் கொடுக்க போகும் குழந்தையை முதலில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்

இதை proper positioning என்று கூறுகிறோம்

  • குழந்தையின் உடல் முழுவதையும் தாய் தனது கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் . உடலை மட்டும் பிடித்து தலை மட்டும் தொங்கியவாறு பால் கொடுக்க கூடாது
  • குழந்தையின் தலை , உடல் இரண்டும் ஒரே சமதளத்தில் வைத்திருக்க வேண்டும். இதற்கு உதவியாக நமது கைகளுக்கு கீழே தலையணை வைத்து கொள்ளலாம்
  • குழந்தையின் உடல் முழுவதும் தாயின் பக்கமாக திரும்பியிருத்தல் வேண்டும். பால் கொடுக்கும் போது தாய் தன் குழந்தையை உற்று நோக்கி அது இன்னும் பால் பருக தூண்ட வேண்டும்
  • குழந்தையின் வயிற்றுப் பகுதி தாயின் வயிற்றுப் பகுதியுடன் ஒட்டியவாறு இருக்க வேண்டும்

அடுத்த சரியான ஒட்டுதல் நடக்கிறதா என்பதை ஆராய வேண்டும் ?

ஆம் .. குழந்தையின் வாய்ப்பகுதிக்கும் தாயின் காம்பு பகுதிக்கும் இடையே சரியான ஒட்டுதல் (attachment)நடந்திருப்பதை பின்வருமாறு அறியலாம்

  • குழந்தையின் வாய் நன்றாக திறந்திருக்கும்
  • குழந்தையின் கீழ் உதடு வெளிப்பக்கமாக விரிந்து இருக்கும்
  • முலையின் மேல் பகுதி ( கருப்பான பகுதி ) வெளியே தெரியும். முலையின் கீழ்பகுதி தெரியாது
  • குழந்தையின் தாடை தாயின் மார்பை முட்டிக்கொண்டு இருக்கும்..மேற்சொன்ன இரண்டும் சரியாக இருந்தால் குழந்தை தானாக நன்றாக உறிஞ்சி பாலை பருகும். அவ்வாறு அது பருகும் ஓசையும் கேட்டுக்கொண்டே இருக்கும் .

இவ்வளவு தான் விசயம் . இதை சரியாக பயிற்சி செய்தால் தாய்பால் சம்பந்தமான பிரச்சனை தோன்றாது.

தாய்மார்களுக்கு ஓர் வேண்டுகோள்

தங்களின் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்பால் மட்டுமே கொடுக்கவும். இரண்டு வயது வரை தாய்பால் கொடுப்பது மிகவும் நல்லது.

Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை